யாழில் இடி மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நீண்ட வறட்சிக்கு பின்னர் வடக்கின் பல பிரதேசங்களில் மழை பெய்து வருகின்ற நிலையில், இடி மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

jaffna

யாழ்.குருநகர் கடற்பரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீன்பிடிக்கச் சென்ற, பற்றிக் நிரஞ்சன் (வயது – 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது சகாக்களுடன் வழமை போல இன்றும் தொழிலுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில், இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. சடலம், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

வடக்கில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், மக்கள் குடிநீருக்கே பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில், தற்போது வடக்கின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக, யாழில் நேற்று இரவு முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததாகவும், தற்போது வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.