திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பான விவகாரம்… பரபரப்பான கட்டத்தில்

தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

karunanidhi-

அவருடன் ராசாத்தியம்மாள், கனிமொழி, மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் வந்துள்ளனர். பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாத காலமாக தனது கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சைபெற்று வருகிறார் கருணாநிதி. டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார்.

பின்னர், டிரக்யாஸ்டாமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார். மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த கருணாநிதியை, அவரது உறவினர்கள் கவனித்துக்கொண்டனர்.

வைரவிழா, முரசொலி பவள விழா என எந்த விழாவிலும் கருணாநிதி பங்கேற்கவில்லை. முக்கியப் பிரமுகர்கள் பலரும் அவரை வீட்டில் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து காவிரி மருத்துவனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக் குழாய் மாற்றப்படுகிறது. இது சாதாரண மருத்துவ பரிசோதனை தான். மருத்துவமனையில் இருந்து இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..