அண்ணாந்து பார்த்து முகத்தில் துப்பிக்கொள்ளும் அரசாங்கம்!: மஹிந்த விமர்சனம்

நல்லாட்சி அரசாங்கம் அண்ணாந்து பார்த்துக்கொண்டு தன் முகத்தில்தானே துப்பிக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.

images (7)

நல்லாட்சி அரசாங்கத்தின் உள்ளக மோதல்கள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களே அரசாங்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் பகிரங்கமாக விமர்சிக்கின்றனர்.

உலகில் எந்தவொரு அரசாங்கத்தையும் அதன் அமைச்சர்களே விமர்சித்த வரலாறு கிடையாது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறு நடக்கின்றது. அந்தவகையில் இந்த அரசாங்கம் அண்ணாந்து பார்த்து தன் முகத்தில் தானே காறித்துப்பிக் கொள்கின்றது.

அதேநேரம் அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்களும் தங்கள் பதவிகளிலிருந்து விலகத் தயாராக இல்லை. அரசாங்கத்தை மட்டுமன்றி சக அமைச்சர்களையும் விமர்சித்துக் கொண்டு வெட்கம் கெட்டுப்போய் தங்கள் பதவிகளில் தொடர்ந்திருக்கின்றார்கள் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.