படையினரை நல்லாட்சி அரசாங்கம் சிறையில் அடைக்காது!

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல என்றும், எந்தவொரு படைத்தளபதியையும் நல்லாட்சி அரசு சிறையில் அடைக்காது என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Soldiers attend a passing out parade of Sri Lanka's UN peacekeeping force in Colombo's suburb of Panagodaநாடாளுமன்றத்தில் இன்று நிலையியல் கட்டளையின் 23/2இந்த கீழ் மஹிந்த அணியான பொது எதிரணியின் எம்.பி. தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் அரசின் மேற்படி நிலைப்பாட்டை அறிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேஸில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தூதுவராகப் பணியாற்றியவருமான ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர் என்றும், அதற்குரிய சான்றுகள் இருக்கின்றன என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

எனவே, மேற்படி அறிவிப்பு பற்றி சரத் பொன்சேகாவிடம் விளக்கம் கோரப்படுமா? அவரின் அறிவிப்பு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? படையினரைக் காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்பட்ட அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? படையினருக்கோ அல்லது இராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராகவோ இவ்வாறு வழக்குத் தொடுக்கப்பட்டால் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? என்பதே தினேஷ் எம்.பியின் கேள்விகளாகும்.

இவற்றுக்கு இரண்டு வாரங்களில் வெளிவிவகார அமைச்சர் பதில்களை வழங்குவார் என்று சபை முதல்வர் அறிவித்தார். எனினும், இதை சாதாரணமான விடயமாகக் கருதி விட முடியாது. விரைவில் பதில் வேண்டும் என பொது எதிரணியினர் வலியுறுத்தினர். இதனால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அதன் பின்னர் கருத்து வெளியிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, சரத் பொன்சேகாவின் கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல. அது அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும்.

வெளிநாட்டிலுள்ள அரசொன்று வழக்குத் தாக்கல் செய்யவில்லை. அமைப்பொன்றே செய்துள்ளது. வெளிநாட்டு நீதிமன்றங்களில் எனக்கு எதிராகவும் வழக்குப் போட முடியும்.

கடந்த அரசே பொன்சேகாவை சிறையில் அடைத்தது. ஆனால், இன்று படையினர் பற்றி முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். எது எப்படியிருந்தபோதிலும் படையினரை நல்லாட்சி அரசு சிறையில் அடைக்காது என்றார்.