இராணுவ வதை முகாம்களுக்கு அருகில் பெண்களின் கதறல் சத்தம்!

இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக கருதப்படும் ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் தனக்கு கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவியான சசிரேகா குறிப்பிட்டுள்ளார்.

sasdxasw

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உள்ளக அரங்கில் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் விசாரணைக்கென சிவில் உடையில் வந்தவர்கள் இரவு 1 மணியளவில் அழைத்துச் சென்றதாகவும், ஜோசப் முகாமை நெருங்கும் போது தனது கண்களை கட்டியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தனது கண்கள் கட்டப்பட்டிருந்தாலும், பெண் பிள்ளைகளின் அழுகுரல்களும், சித்திரவதைகளால் ஆண்கள் கதறியதையும் கேட்கும் போது அது ஒரு நிலக்கீழ் அமைக்கப்பட்ட சித்திரவதை முகாம் என்பதை தன்னால் ஊகிக்க முடிந்ததென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜோசப் முகாமில் தன்னை தனி அறையில் தடுத்து வைத்து விசாரணை நடத்தும் போது, புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி விசாரித்ததாகவும் தனக்கு தெரிந்த விடயங்களை குறிப்பிட்டதாகவும் சசிரேகா கூறியுள்ளார்.

விசாரணை முடிந்த பின்னர் வவுனியாவில் பேருந்து ஒன்றில் மக்களுடன் ஏற்றி ராமநாதபுரம் முகாமிற்கு அனுப்பி வைத்திருந்ததாக குறிப்பிட்ட சசிரேகா, ராணுவத்தினரால் அங்கு தமக்கு பாரிய உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரியவால், கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜோசப் வதை முகாம் நடத்தப்பட்டு வந்ததாக பல சர்வதேச அமைப்புக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.

அங்கு தமிழ் இளைஞர் யுவதிகள் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்திருந்தார். எனினும், இக் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.