அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களும், இரு பீடங்களின் காரக சங்க சபாவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்குப் பின்னால் இருப்பதாக அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா பிரதமர் கூறியுள்ள நிலையில், நேற்றிரவு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்ட, அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர்,
“புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்குப் பின்னால் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள் உள்ளனர்.
தற்போதைய அரசியலமைப்பின் மீது இரு மகாநாயக்கர்களும் திருப்தி கொண்டுள்ளனர். புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றங்களை நிராகரித்து, உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் காரக சங்க சபாவின் முடிவை, பாராட்டுவதாக ராமன்னய மகா நிக்காயாவின் காரக சங்க சபாவின் உறுப்பினரான பேராதனை ராஜபவனாராமய விகாரையின் பிரதம விகாராதிபதி கெபிட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இரு பீடங்களினதும், இந்த முடிவு பொருத்தமானது என்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.