நீதிபதி இளஞ்செழியன் ஒரு மனிதரே அல்லர்;மேர்வின் சில்வா விமர்சனம்

நீதிபதி இளஞ்செழியன் ஒரு மனிதரே அல்லர்;மேர்வின் சில்வா விமர்சனம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதவான் இளஞ்செழியன் ஒரு மனிதரே இல்லை என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்து ஆலயங்களில் மிருகபலி இடுவதற்கு தடை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளஞ்செழியன் நேற்றைய தினம் தீர்ப்பளித்திருந்தார்.

இதற்கமைய யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடுவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீதிபதி இளஞ்செழியனினால் அறிவிக்கப்பட்ட இந்த தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் புத்த பெருமான் அளவுக்கு முக்தியடைந்தவரென தாம் நினைப்பதாக மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

மேலும் நீதிபதி இளஞ்செழியனின் இந்த தீர்ப்பை ஏனைய நீதிபதிகளும் முன்னுதாரணமாக பின்பற்ற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான தீர்ப்புக்களை அறிவிப்பதன் ஊடாக கிடைக்கும் நன்மையினால் சொர்க்கத்திற்கு இலகுவில் செல்லமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளும் இதுபோன்ற நல்ல விடயங்களை கண்டால் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் மேர்வின் சில்வா பரிந்துரை செய்துள்ளார்.

இதேவேளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னேஸ்வரம் காலிக் கோவிலில் மிருக பலி பூஜை இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது கோவிலுக்குள் அத்துமீறி பிரவேசித்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, பூஜைக்காக அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த கால்நடைகளை அவிழ்த்துவிட்டதோடு பூஜை செய்வதற்கு இடையூறும் ஏற்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.