காலாவதியான திரிபோஷா பைகள், கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி – சாந்தபுரம் உருத்திரபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள கர்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடந்த 13, 14 ஆம் திகதிகளில், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் திரிபோஷா பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 15 ஆம் திகதியே, குறித்த திரிபோஷா பக்கெட்களில் காலாவதித் திகதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவற்றை வழங்கிய போது, உடனடியாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
காலாவதியாவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட, குறித்த திரிபோஷாவை உட்கொண்ட தனது மகனுக்கு, வாந்திபேதி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டதாக சாந்தபுரத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில், ஆய்வு செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் எஸ்.மைதிலி தெரிவித்தார்.