சொகுசு கார் இறக்குமதிசெய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன் மீது பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு, வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில், ரூ.1.6 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலாவின் கணவர் நடராசன், உறவினர் பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜாரிதா சுந்தரராஜன் ஆகிய 4 பேருக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நால்வர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை நிராகரித்த உயர் நீதிமன்றம், தண்டனையை உறுதிசெய்தது.
இதற்கிடையே, சிறைக்குச் செல்வதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று ம.நடராசன், பாஸ்கரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதற்கும் உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து ம.நடராசன், பாஸ்கரன் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். ம.நடராசன், தன் உடல்நிலையைக் காரணம் காட்டி, சிறைக்குச் செல்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி தீபக் குப்தா, சிறைக்குச் செல்வதிலிருந்து விலக்கு அளித்தார். பாஸ்கரனுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது அவர்கள் தற்காலிகமாக சிலகாலம் சிறைக்குச்செல்லத் தேவையில்லை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நடராசனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பித்து, சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட மற்ற நால்வரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.