இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ஒகி புயலில் சிக்கி கரை திரும்பாத கன்னியாகுமரி பகுதி மீனவர்களை மீட்கக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச்செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கைச் சிறைகளில் நீண்ட நாள்களாக வாடிவரும் மீனவர்களை விடுவிக்க, மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்களது வாழ்வாதாரமான படகுகளை மீட்டுத் தரக் கோரியும், சமீபத்தில் உருவான ஒகி புயலில் சிக்கி கரை திரும்பாத மீனவர்களை விரைவாக மீட்கக் கோரியும், ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகு மீனவர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேசிய கடல் புயல் கால சேமிப்பு நிதியை வழங்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் பேரூந்து நிலையத்தில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மீனவர் சங்கத் தலைவர்கள் ஜேசு, எமரிட், சகாயம் மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.