லிபியாவில் உள்ள அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு ஐரோப்பிய அரசாங்கங்களும் உடந்தையாக இருப்பதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
லிபிய கடற்பரப்பில், சட்டவிரோதமாக பயணிக்கும் பயணிகளை தடுக்கும் வகையில் இந்த செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆதரவை வழங்குவதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாடுகளில் நிலவும் போர், வன்முறைகள் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பாவிற்கு குடியேறும் பொருட்டு குடியேற்றவாசிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான பயணங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இவர்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இவ்வாறு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், குடியேற்றவாசிகளின் பரம்பலை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய அரசாங்கம் துணைபோவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், லிபிய கடலோர காவற்படையினருக்கு பயிற்சிகளையும் நிதியையும் ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருவதையும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.