மத்திய அரசாங்கம் வழங்குகின்ற மொத்த நிதியையே உரிய முறையில் பயன்படுத்தாது மீதம் வைக்கின்ற வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் மலேஷியா வழங்குகின்ற உதவியை வைத்து என்ன செய்வார் என்று புரியவில்லை என சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இரா ஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
சிறந்த நீதியரசரான வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் அரசியல்வாதியாக தோல்வி அடைந்திருக்கின்றார் என்பதையே நான் கூறுகின்றேன் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்
இலங்கை வந்திருந்த மலேஷியப் பிரதமரை வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது வடக்கை கட்டியெழுப்ப உதவி வழங்குவதாக மலேஷியப் பிரதமர் கூறியிருந்தார்.
இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் வடக்கு முதலமைச்சர் மத்திய அரசாங்கத்தினால் அனுப்பப்படுகின்ற அனைத்து நிதியையும் பயன்படுத்தாமல் அதிலும் மீதம் வைத்துக்கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு வடக்கு மாகாணசபைக்காக அனுப்பப்படும் நிதியையே முழுமையாக பயன்படுத்தாமல் மீதம் வைத்துக்கொண்டிருக்கும் வடக்கு முதல்வர் எவ்வாறு மலேஷியாவின் உதவியைப் பெற்று வடக்கை கட்டியெழுப்புவார் எனத் தெரியவில்லை.
அதாவது வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் ஒரு சிறந்த நீதியரசராக இருந்தவர் ஆனால் அவர் ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைந்திருக்கின்றார்.
மலேஷியப் பிரதமரின் ஆலோசனையைக் கேட்டாவது அவர் எதிர்வரும் காலங்களில் உரிய முறையில் செயற்பட்டு வடக்கை கட்டியெழுப்புவார் என எதிர்பார்க்கின்றோம்.
மலேசியப் பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் – இணைந்து செயற்பட இணக்கம்
மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் ரசாக் Dec 19, 2017 அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ள மலேசியப் பிரதமர் அப்துல் ரசாக்,
“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
மாகாணத்தின் மீள் அபிவிருத்திக்கும் அங்குள்ள தமிழ்ச் சமூகத்தை உயர்த்துவதற்கும், ஆதரவளிப்பதில், இணைந்து செயற்படுவதற்கு நாம் இணங்கியுள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.