ஜனாதிபதியை காண சென்ற இளைஞன் பரிதாபமாக பலி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு கேகாலையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர், தனியார் பேருந்து ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரம்புக்கனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளரான ஜே.எம்.ஆர்.சம்பத்தின் ஆதரவாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 27 வயதான அவர் ரம்புகனை தல்தேவ பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

கூட்டத்திற்கு வந்தவர்கள் பாடல் பாடி மகிழ்ந்துள்ளனர். இதன் போது ஏற்பட்ட அதிக சத்தம் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.