மனைவி செருப்பால் அடித்ததால் கணவர் அதிர்ச்சி முடிவு!

மனைவி செருப்பால் அடித்ததால் விரக்தியடைந்த கணவர் 3 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூர் அருகில் உள்ள பூஇலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (38). இவர் மனைவி காந்திமதி (32). தம்பதிக்கு மதி இனியன் (3) என்ற மகன் உள்ளான்.

சில மாதங்களாக கமலக்கண்ணணுக்கு வேலை இல்லாததால் குடும்பத்துக்கு சரியான வருவாய் கிடைக்கவில்லை.

இதனால் அவருக்கும், காந்திமதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களை கமலக்கண்ணன் தாய் சகுந்தலா சமாதானம்படுத்தி வந்த நிலையில் நேற்று மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த காந்திமதி தனது கணவர் மற்றும் மாமியாரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் வேதனையடைந்த கமலக்கண்ணன் மதிஇனியனை பைக்கில் ஏற்றி கொண்டு வெளியில் சென்றுள்ளார். மாலை 6 மணி ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடினார்கள்.

இந்நிலையில் இரவு 11 மணியளவில் அங்குள்ள ஒரு தரைக்கிணறு பகுதியில் கமலக்கண்ணன் மயங்கி கிடக்க அவரருகில் பூச்சி மருந்தும், காலி மது பாட்டிலும் இருந்துள்ளது.

இதோடு, அருகிலிருந்த கிணற்றில் மதிஇனியன் சடலமாக கிடப்பதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதுடன், கமலக்கண்ணன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்த அறிந்த பொலிசார் மதிஇனியனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.