செருப்பு வீச்சு! அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்!

கைதராபாத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நடிகை தமன்னா மீது வாலிபர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி என்று பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்படயிருந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு இன்று சென்றுள்ளார். அவரைக் காண கடை அருகில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்த நிலையில், திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து வெளியேறிய தமன்னாவை நோக்கி கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவர் செருப்பை வீசி எறிந்துள்ளார்.

ஆனால், சற்று குறி தவறி அது, நகைக்கடை ஊழியர் மீது விழுந்தது. இது தொடர்பாக, அந்த ஊழியர், செருப்பு வீசிய வாலிபர் மீது நாராயன்குடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவரது பெயர் கரிமுல்லா (31) என்றும், பிடெக் பட்டதாரி என்றும், முசீராபாத் பகுதியில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், தான் தமன்னாவின் தீவிர ரசிகர் என்றும், சமீபகாலமாக அவரது படங்கள் எதுவும் சரியில்லாததால், விரக்தியில் இருந்து வந்துள்ளதால், தமன்னா மீது செருப்பு வீசியதாக தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.