அனைவரும் என் அரசியல் கொள்கைகளுடன் இணைந்துகொள்ள முடியாது! – ஜனாதிபதி

தமது அரசியல் கொள்கைகளுடன் இணைந்துகொள்ள முடியாது என்பதை அறியாது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தாம் அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ள கூடியவாறு தற்போது சுதந்திர கட்சி வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ரிகல்லகஸ்கட பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

திருடர்களை விடுவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கட்சிக்கு தூய்மையான அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒருபோதும் ஒரே மேடையில் இணைந்துகொள்ள முடியாது.

தமது அரசியல் கொள்கைகளுடன் இணைந்துகொள்ள முடியாது என்பதை அறியாது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தாம் அழைப்பு விடுக்கவில்லை

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, தமது குறிக்கோள்களை நிறைவேற்ற எவரும் செயற்பட்டபோதிலும் நாட்டிற்கு தேவையான தூய்மையான அரசியல் பயணத்தினை எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் தான் வெற்றிகொள்வேன்.

திருடர்கள் அற்ற, திருட்டு செயற்பாடுகளில் ஈடுபடாத, அத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தூய்மையான தேசத்தை கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல அழைப்பு விடுக்கின்றேன்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தோல்வியை சந்தித்திருந்தது.

எனினும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ள கூடியவாறு தற்போது கட்சி வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊழல் மோசடிகள் அற்ற தூய்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்கும், நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களும் தம்முடன் கைகோர்த்துள்ளதாக” ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.