ஐபிஎல், இத்தனை கோடியா பிசிசிஐ வருமானம்?

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மூலம் பிசிசிஐ-க்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நடத்தும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வருடா வருடம் பிரபலமடைந்து வருகிறது.

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் மீண்டும் களமிறங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் கோடி கணக்கில் செலவு செய்து வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளது.

உலக அளவில் பணக்கார வாரியமாக அறியப்படும் பிசிசிஐ, கடந்த 10 ஐபிஎல் சீசனில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

இந்த தகவலை சேகரித்த இந்திய வருமான வரித்துறை, சரி செலுத்த கோரி பிசிசிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு சொசைட்டிகள் பதிவகத்தில் லாபம் ஈட்டாத கிரிக்கெட் அமைப்பு என பிசிசிஐ பதிவு செய்துள்ள நிலையில் வருமான வரியில் சலுகை வழங்கப்பட்டு வந்தது.

இதனை மறுத்த வருமான வரித்துறை, 2008 முதல் நடைபெற்ற போட்டிகளை கணக்கில் கொண்டு 3,500 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என கோரிய நிலையில், அந்த தொகையை பிசிசிஐ செலுத்தியுள்ளது.

ஆனால், 30 சதவிகிதம் வரி அதிகம் வசூலிக்கப்பட்டதாகவும் அந்த வரியில் சலுகை வேண்டும் என்றும் வருமானவரி ஆணையம் மற்றும் மும்பை ஐகோர்ட்டில் பிசிசிஐ வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.