சொலமன் சிறிலை யாழ். மேயராக நியமிக்க வேண்டும்: கூட்டமைப்பின் தலைமையிடம் கோரிக்கை

யாழ். மாநகர சபையின் மேயராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறிலை நியமிக்க வேண்டும் எனக் கோரும் கடிதம், கூட்டமைப்பின் தலைமையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வட்டார உறுப்பினர்கள் சிலர் இந்த கடிதத்தை கையளித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாநகர சபைக்கான மேயராக இ.ஆனோல்ட் நிறுத்தப்பட்டிருந்தார். எனினும் சொலமன் சிறிலுக்கு அப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சொலமன் சிறிலை மேயராக்க வேண்டும் என்று கூறும் ஒரு குழுவினர், யாழ் மாநகர சபையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.