தாதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இராணுவ அதிகாரி சிக்கினார்!!

கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமை தொடர்பில் இராணுவத்தின் கப்டன் தரத்தை உடைய மற்றொரு அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரானுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் பிரிவின் கப்டன் தர அதிகாரியான ஜே.எம்.ஏ.கே. ஜயவர்தன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமையகம் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க அவர் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான போது, அவரைக் கைது செய்ததாகவும் அவரிடம் இருந்து கஞ்சாப் போதைப் பொருளை உரிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை உபகரணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் கல்லடி, மன்னார் இராணுவ முகாமுக்குட்பட்டு சேவையில் இருப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பில் இராணுவ கப்டன் தர வைத்தியர் ஒருவர், லான்ஸ் கோப்ரல் தர சாரதி, தகவல் தொழில் நுட்ப பொறியியலாளர் என மூவரை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளனர்.

தாதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து மது, கஞ்சா சுருட்டு போன்றவற்றை உபயோகிக்கச் செய்து அவரை இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு பல சந்தர்ப்பங்களில் உட்படுத்தியுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் மூவரைத் தேடி தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.