`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்!’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் கர்நாடகாவில் பெருமளவு தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்று கர்நாடகா தெரிவித்துள்ளது.

சித்தராமைய்யா

*இதுவே இறுதி தீர்ப்பு. மேல்முறையீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*’காவிரி நதி நீரை யாரும் உரிமைக் கொண்டாட முடியாது. எந்த மாநிலத்திற்கும் அந்த உரிமையில்லை’ என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

*காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் தர வேண்டும் என்று  நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

*தற்போது கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி அளவு கூடுதலாக தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு – கர்நாடகா  இடையில் நடக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான வழக்கில்  உச்ச நீதிமன்றம் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கி வருகிறது. தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வாசித்து வருகிறது.

காவிரி

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது.

*காவிரி பிரச்னையில் தஞ்சை விவசாயிகள் 1990-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட்டது.

*மத்திய அரசு 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி தீர்ப்பாயம் அமைத்தது.

*பசுமை தீர்ப்பாயம் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, கர்நாடகா 205 டி.எம்.சி நீரைத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கர்நாடகா தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் குதித்தது. கலவரம் வெடித்தது. கர்நாடகாவில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் கர்நாடகாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். இடைக்கால தீர்ப்புக்குத் தடைவிதித்து அவசர சட்டம் கொண்டுவந்தது கர்நாடக. அவசர சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது
*இதனிடையே இடைக்கால தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணையை கர்நாடகா ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்துக்குத் தண்ணீரும் தரவில்லை.

*1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காவிரி தண்ணீருக்காக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இப்படியாகப் பயணித்தது காவிரி பிரச்னை.

*1995-ல் தமிழகம் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றது. தமிழகத்துக்கு உடனடியாக 11 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவிடுகிறது. அதையும் கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

*இப்படியாக காவிரி பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்காமல் தொடர்ந்தது. இறுதியாக 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி 1000 பக்கம் கொண்ட தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் வழங்கியது. அதன்படி காவிரியில் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி , தமிழகம் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி என்று பகிர்ந்துகொள்ள உத்தரவிடுகிறது.  வழக்கம்போல் கர்நாடகா தீர்ப்பை நிராகரித்துப் போராட்டத்தில் குதித்தது.

*இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.  இந்த வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு எதிர்த்தது. விசாரணை நடத்த தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றது உச்ச நீதிமன்றம்.

*வழக்கு விசாரணைகளின் போது தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப்  பிறப்பித்தது.  கர்நாடக அரசு எந்த உத்தரவுகளையும் செயல்படுத்தவில்லை.

காவிரி பிரச்னை

*இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இன்றைய தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக அமையும் என்று விவசாயிகள் உறுதியாக நம்பி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இன்று காலை 10 மணியளவில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.