அதிக அளவில் வறட்சி அடைகிறதா உங்கள் வாய்???

சிலருக்கு வாய் அதிகமாக வறட்சியடையும். பொதுவாக வாய் வறட்சி அடைவதற்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான் காரணமாக இருக்கும். ஆனால் ஒருவருக்கு வாய் அதிகம் வறட்சியடைவதற்கு அவர்களது உடலில் இருக்கும் வேறுசில பிரச்சனைகளும் காரணம் என்பது தெரியுமா?எனவே நீங்கள் அதிகமாக வாய் வறட்சியை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

அதற்கு முன் எதனால் எல்லாம் வாய் அதிகம் வறட்சியடைகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.புற்றுநோய் சிகிச்சைகளான கதிரியக்கம் மற்றும் ஹீமோதெரபி போன்றவற்றை மேற்கொண்டால், அதன் காரணமாகவும் வாய் வறட்சியால் அவஸ்தைப்படக்கூடும்.

சளி இருமலுக்கு எடுக்கும் ஆன்டி-ஹிஸ்டமைன் மருந்து மாத்திரைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், வயிற்றுப் போக்கு, பர்கின்சன் நோய் போன்றவைகளுக்கு எடுக்கும் மருந்துகளாலும் வாய் அதிகம் வறட்சியடைக்கூடும்.

புகையிலை மற்றும் மது போன்றவற்றை அதிகம் உபயோகித்தால், உமிழ்நீர் சுரப்பிகள் வறட்சியடைந்து, வாயை எப்போதும் வறட்சியுடனேயே வைத்துக் கொள்ளும்.சைனஸ் பிரச்சனை இருப்பவர்களால் நிம்மதியாக மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாது. அவ்வப்போது வாயின் வழியாகவும் சுவாசிப்பதால், அதன் காரணமாக வாய் அதிகம் வறட்சியடையும்.

வாய் வறட்சி என்பது ஒரு நோய் இல்லாவிட்டாலும், அது உடலில் இருக்கும் ஒரு பிரச்சனையின் அறிகுறி என்பதை மறவாதீர்கள். அதுவும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்றவற்றின் அறிகுறிகளுள் ஒன்று என்பதை மறக்க வேண்டாம்.