மாணவியை வாடகைக்கு விட்ட பெண்!

பாடசாலை மாணவியொருவரை விற்பனை செய்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று பேர் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய பெண்ணொருவரும், 23 வயதுடைய அவரின் மகனும் மற்றும் வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் 46 வயதுடைய நபரொருவருமே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலை மாணவி தற்போதைய நிலையில் , நீர்க்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடான காவற்துறையின் குழந்தைகள் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , சந்தேகநபரான குறித்த பெண் மாணவியை உந்துருளியொன்றில் அழைத்துச் சென்று வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை , குறித்த பெண்ணின் மற்றுமொரு மகன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. அவரை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

கிம்புலாபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணையில் நீண்ட காலமாக சந்தேகநபரான குறித்த பெண் இவ்வாறு பாடசாலை மாணவியை பல நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடசாலை நிறைவடைந்ததும் குறித்த சிறுமியை இவ்வாறு விபச்சாரத்திற்கு குறித்த பெண் உள்ளிட்ட குழுவினர் ஈடுபடுத்தி வந்துள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கடான காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.