தமிழ் பேசியதால் இளைஞர் மீது தாக்குதல்!

பெங்களூரில் தமிழில் பேசிய நபரை பேருந்து நடத்துனர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த கார்த்திக்(30) என்பவர் கடந்த 8 வருடங்களாக பெங்களூரில் வசித்து வருகிறார். அங்குள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பிஎச்டி படித்துவருகிறார்.

இந்நிலையில் அறிவியல் கழகத்துக்கு செல்வதற்காக, பேருந்தில் ஏறியுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே செல்லாமல் படியில் நின்றிருந்த அவரை உள்ளே வருமாறு நடத்துனர் கூறியுள்ளார்.

அதற்கு, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிடுவேன் என தமிழில் கார்த்திக் கூறியுள்ளார். இதனைகேட்டு கடுப்பான நடத்துனர், தமிழனா நீ என பயங்கரமாக திட்டியதுடன், அவரை காலால் மிதித்து பேருந்தை விட்டு இறக்கிவிட்டுள்ளார்.

கார்த்திக்குக்கு ஆதரவாக அங்கிருந்தவர்கள் யாரும் பேசவில்லை என தெரிகிறது, இதனை தொடர்ந்து குறித்த நடத்துனர் மீது சதாசிவம்நகர் பொலிசில் கார்த்திக் புகார் அளித்துள்ளார்.

வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.