குழந்தைகளுக்கே உரித்தான கள்ளங்கபடமற்ற அப்பாவித்தனமும் மகிழ்ச்சியும் உயிர்ப்பும் நிறைந்த, ஆஷிஃபாவின் அகண்டு விரிந்த பட்டாம் பூச்சிக் கண்களை மறக்கவே முடியவில்லை.
அந்தக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கும் போதே மனதோடு விரல்களும் நடுங்குகின்றன.
ஆஷிஃபாவுக்கு என்ன நடந்தது?
ஆஷிஃபா ஒரு பக்கர்வால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழந்தை. இந்து, முஸ்லிம் என எதுவுமறியாத குழந்தை என்று அவளது தந்தை கண்ணீரோடு சொன்னதுதான் சரியானது.
ஜம்முவின் ரசானா கிராமத்தில் குதிரைகளை மேய்த்து வந்த குதிரைக்குட்டிகளோடு இன்னொரு குட்டியாய் விளையாடித் திரிந்த ஒரு சின்னஞ்சிறு தேவதை.
அன்றும் தனது குதிரையைத் தேடித்தான் அந்த சின்னஞ்சிறு குழந்தை அலைந்து கொண்டிருந்தாள். அதே ஊர்க் கோவிலில் பூசாரியாக இருக்கும் கொடூர மனம் படைத்த சஞ்சய்ராம் மற்றும் அவனது கூட்டாளிகளின் திட்டம் பற்றியெல்லாம் அவளுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
அவர்கள் திட்டமிட்டபடி, சஞ்சய்ராமின் உறவினரான 17 வயது பையன் அவளை காட்டுக்குள் போய்விட்ட குதிரையைக் கண்டுபிடித்துத் தருவதாக கூறி அழைத் தான்.
கள்ளங்கபடமற்ற குழந்தை குதிரையைத் தேடி அவன் பின்னால் சென்றது. அவளை மயங்கவைத்து காட்டிலேயே அவன் பாலியல்வன்புணர்வு செய்துள்ளான்.
பிறகு மயங்கிய நிலையிலேயே சஞ்சய்ராமின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் மேசை அடியில் மறைத்து வைக்கப்பட்டாள்.
சஞ்சய்ராம் தனது குற்றத்தை மறைக்க காவல்துறையில் பணிபுரிந்த திலீப்பை நாடினான். அக்குழந்தையை பாதுகாக்க வேண்டிய திலீப்பும் கயவனாக மாறி அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்துள்ளான்.
தொடர்ந்து அவனோடு காவல்துறையைச் சேர்ந்த சில நண்பர்களும் பாலியல் வன்புணர்விலும் குற்றத்தை மறைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். பிறகு மீரட்டில் இருக்கும் சஞ்சய்ராமின் மகன் இதற்காகவே வரவழைக்கப்பட்டுள்ளான்.
தொடர்ந்து ஒரு வாரம் மயக்கமருந்து கொடுத்து கோவிலில் அணு அணுவாக அந்தக் குழந்தை சிதைக்கப்பட்டுள்ளது.
ஒரு வார சித்திரவதைக்குப் பிறகு சஞ்சய்ராம் அந்தக் குழந்தையை கொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மற்றவர்களிடம் சொல்லியுள்ளான்.
அவர்கள் மயங்கிய நிலையிலேயே குழந்தையை காட்டுக்கு தூக்கிச் சென்றனர். கொல்வதற்கு முன்பு இன்னொருமுறை அக்குழந்தையை பாலியல் வல்லுறவு செய்ய விரும்புவதாகச் சொல்லிய திலீப், தனது காமவெறிக்கு அக்குழந்தையை இன்னொருமுறை பலியிட்டான்.
பிறகு கழுத்தை நெரித்து அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்றான். முடியாமல் போகவே அவள் ஆடையையே கயிறாக்கி கழுத்தை நெரித்து 17 வயது பையன் கொலை செய்தான்.
அவள் செத்துவிட்டதை உறுதி செய்துகொள்ள இரண்டு முறை கல்லைத் தூக்கி அக்குழந்தையின் தலையில் போட்டுள்ளனர். ஆஷிஃபா எனும் பட்டாம்பூச்சி ஒவ்வொரு அங்கமும் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டாள்.
இந்தக் கொடூரம் நிகழ்ந்து கொண்டிருந்த நாட்களில் இன்னொரு பக்கம் ஆஷிஃபாவின் அப்பாவி ஏழைக் குடும்பம் காணாமல் போன குழந்தையைத் தேடி ஊரெங்கும் அலைந்தது. அடுத்த நாளே காவல் நிலையத்திலும் புகார் செய்தனர். சஞ்சய்ராமின் கோவிலுக்கும் வந்தனர்.
அந்தக் கோவிலுக்குள்தான் ஆஷிஃபாவை மயங்கிய நிலையில் அடைத்து வைத்து சிதைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால், உறவினர் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று கூசாமல் பொய் சொல்லி கோவில் வாசலிலேயே திருப்பி அனுப்பிவிட்டான் சஞ்சய்ராம். கோவிலுக்குள் தவறு நடக்காது என்று நம்பிக்கை கொண்டிருந்த அந்த ஏழைக் குடும்பமும் கோவிலுக்குள் சென்று தேடாமல் திரும்பிச் சென்றது.
அந்த அப்பாவி முஸ்லிம் ஒரு இந்துக்கோவில் மீது வைத்திருந்த நம்பிக்கை, அந்தக் கோவிலில் தினமும் பூசை செய்பவனுக்கு இல்லை. அவன் அந்தக் கோவிலை எவ்வித குற்றவுணர்வுமில்லாமல் தனது கொடூரச் செயலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தான்.
காவல்துறை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குழுவில் அந்தச் சிறு தளி ரைச் சிதைத்த குற்றவாளிகளும் இடம் பெற்றிருந்ததுதான் கொடூரத்தின் உச்சம்.
நிர்பயா முதல் கொடூரமான பாலியல் வன்புணர்வுகளை இந்த இந்தியத் தேசம் கடந்து போய்க்கொண்டுதானே இருக்கிறது. ஆஷிஃபாவும் அப்படிக் கொடூரமாக சிதைக்கப்பட்ட இன்னொரு பெண்தானே? என்று தோன்றலாம். ஆனால் ஆஷிஃபா விஷயத்தில் கொடூரம் இத்தோடு முடிந்துவிடவில்லை.
இந்து ஏக்தா மஞ்ச் (பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்புகளில் ஒன்று) என்ற அமைப்பு இந்தக் கொடூரக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கூடாது என்று ஜம்முவில் போராட்டம் நடத்தியது.
இதில் வழக்கறிஞர்களும் அடக்கம். இதைவிடக் கொடுமை அந்தப் பிஞ்சுக் குழந்தையை அணு அணுவாக சிதைத்தவர்களுக்கு ஆதரவாக அந்தப் போராட்டத்தில் இந்திய தேசத்தின் கௌரவச் சின்னமான தேசியக்கொடி பறந்தது. தேசமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்.
அத்தோடு முடிந்துவிடவில்லை. பா.ஜ. கட்சியைச் சார்ந்த இரண்டு மாநில அமைச்சர்கள் இக்கொடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கொன்றவர்கள் இந்துக்கள். ஆகவே தான் அவர்கள் பக் கம் நிற்கவேண்டும் என்று பா.ஜ.க.வின் சமூக வலைத்தளப் போராளிகள் முழங்கினர்.
நேரடியாகவே தன் அமைச்சர்களை அனுப்பி குற்றவாளிகளுக்கு ஆதரவு தந்ததோடு, தான் அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் அரசின் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றவாளிகளைப் பாதுகாக்க முயன்றது பா.ஜ.க. இதனால் மெகபூபா முக்தியின் காஷ்மீர் அரசு மௌனம் காத்தது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்று மேடைகளில் முழங்கும் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்தார்.
ஓர் அப்பாவிச் சிறுமியைத் தொடர்ச்சியாகப் பல நாட்கள் கோவிலில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளும் அவரை ஆதரிக்கும் அமைப்புகளும் இந்து மதத்தை ஒரு கேடயமாக முன்னிறுத்தினர். இந்து மதத்திற்கு இதைவிடவும் அவமானகரமான ஒரு தருணம் வந்துவிட முடி யாது.
இந்து மதம் உட்பட எல்லா மதங்களும் மக்களிடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையுமே போதி க்கின்றன. இந்நிலையில் இந்தச் சம்பவத்தை இந்துமதம் ஏற்றுக்கொள்ளுமா?
மனிதராகப் பிறந்த யாராலும் மன்னிக்கவோ, ஆதரிக்கவோ முடியுமா? ஆனால் எவ்விதக் கூச்சமும் இல்லாமல் மக்களிடையே மதத்தின் பெயரால் வெறுப்பை விதைக்கும் ஒரு கும்பல் ஒரு குழந்தையை மதத்தின் பெயரால் பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்ததை ஆதரிக்கும் என்றால், அக்கொடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தேசியக்கொடியை உயர்த்திப் பிடிக்கும் என்றால் இந்தத் தேசம் அதைப் பார்த்துக்கொண்டு மௌனித்துக் கிடக்குமா?
நல்லவேளையாக அப்படியெதுவும் நிகழவில்லை. காஷ்மீர் மட்டுமல்ல தேசமே கொந்தளித்துத் திரண்டெழுந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி விடுத்த அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பை ஏற்று நள்ளிரவில் டெல்லி வீதியில் மக்கள் வெள்ளம் கரை புரண்டது.
அவர்கள் கையில் ஏந்திய மெழுகுவர்த்தி ஆஷிஃபாவிற்காகக் கரைந்து அழுதது. இதன் தொடர்ச்சியாக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின் றன.
ஜம்மு–காஷ்மீர் க்ரைம் பிராஞ்ச் சிறப்புப் புலனாய்வுக்குழுவின் ஒரே பெண் உறுப்பினரான ஸ்வேதாம்பரி சர்மா குற்றவாளிகளைக் கைது செய்வதில் உறுதியோடு நின்றார்.
தனது சக வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நின்று மிரட்டியபோதும் அஞ்சாமல் தீபிகா ராஜ்வத் எனும் வீரப்பெண்மணி (வழக்கறிஞர்) ஆஷிஃபாவிற்காக நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் நின்றார். இப்பொழுதும் குற்றவாளிகள் தரப்பினர் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதனிடையே குற்றவாளிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிராக தேசமே திரண்டெழுந்தது. அதில் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இதுதானா நமது முன்னோர்கள் கனவு கண்ட, நாம் வசிக்க விரும்புகிற இந்தியா? இல்லை! எனது பெயரால் #NotInmy Name (இந்துவின் பெயரால்) இதைச் செய்யாதே என்று மக்கள் வெகுண்டெழுந்தனர். இந்த மக்கள் கொந்தளிப்பிற்குப் பிறகே பிரதமர் மோடி, இந்தியாவின் மகளுக்கு நீதி கிடைக்கும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் நடந்த வன்முறைகள், கலவரங்கள், கொலைகள், பாலியல் வன்புணர்வு உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்திற்கும் இந்து மதமும் தேசப்பற்றும் தேசியக்கொடியும் தொடர்ந்து கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது வெட்கக்கேடானது.
மத்திய அரசை, மதத்தின் பெயரால் நடக்கும் அத்துமீறலை விமர்சிக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், ஊடகவியலாளர்கள், தனிநபர்கள் எல்லோரும் தேசவிரோதிகளாகவும் இந்துக்களின் விரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர்.
ஆஷிஃபா விவகாரத்திலும் அதுவே நடந்தது. ஆனால் நல்லவேளை மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். உண்மையான தேசவிரோதிகளை இனம் கண்டு கொண்டு விட்டார்கள்.
பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள், சிறுமிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கி யமல்ல. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே. அதேபோல குற்றவாளிகளும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல, அவர்கள் குற்றவாளிகளே.
ஆஷிஃபாவின் கள்ளங்கபடமற்ற ஒளி வீசும் கண்களின் முன் குற்றவுணர்வோடு இன்று நம் தேசம் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. இனி இந்தத் தேசத்தில் ஒவ் வொரு பெண் குழந்தையும் ஆஷிஃபா தான். அவர்களையும் அவர்களது குழந்தை மையையும் காப்பாற்றுவதும், மதத்தின் பெயரால் கொடூரங்கள் நிகழாமல் தடுப் பதும்தான் ஆஷிஃபாவுக்கு இந்தத் தேசம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
(மேற்படி கண்ணீர் கட்டுரைக்குச் சொந்தக்காரிதான் பத்திரிகையாளினி ஜோதிமணி)
தகவல்: ஷண்