அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை பிரதான ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் ஏகமனதான ஆதரவு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்புக் குழுவினது ஆதரவும் இதற்குக் கிடைக்கும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றது.
அடுத்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்திக்கவுள்ள நிலையில் இந்த விவகாரங்கள் பேசப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலினை இலக்கு வைத்து பிரதான கட்சிகள் அனைத்தும் காய் நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆக்கின தனித்த பயணங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. அரசியல் மேடைகளிலும் அவ்வாறான கருத்துக்களை முன்வைத்தும் வருகின்றனர்.
பொதுஜன முன்னணியின் தீர்மானம்
இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாராந்த உத்தியோகபூர்வ சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமையும் இடம்பெற்றுள்ள நிலையில் இதில் பிரதான விடயமாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஆகியோரின் பெயர்களே அதிகமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
எனினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை நியமித்தால் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் ஆழமாக கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவுடன் மட்டுமே இதனை முன்னெடுக்க முடியும். மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக் ஷ என்ற அடையாளம் மட்டுமே ஆழமாக பதிந்துள்ள நிலையில் அவரின் தெரிவே இறுதியாக இருக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் ஆதரவை நாடுகின்றது
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவு கிடைக்காத போதிலும் பெரும்பான்மை ஆதரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பக்கமே உள்ளது. எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இது குறித்து கலந்துரையாடவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி முக்கிய பிரமுகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இந்த வாரம் இடம்பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் இந்த சந்திப்பினை அடுத்த வாரம் நடுப்பகுதியில் நடத்துவதாக கூறுகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் 16 பேரும் சுயேச்சையாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ள போதிலும் அவர்களும் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் சுயேச்சையாக செயற்படவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த நியமிக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தலைமையில் சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூடும்
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது. இந்த மத்திய குழுக் கூட்டத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் புதன்கிழமை நாடு திரும்பவுள்ள நிலையில் அதற்குப் பின்னர் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் கட்சியின் அடுத்த கட்ட இலக்குகள் குறித்தும் கலந்துடையாடப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.
அத்துடன் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரபால சிறிசேன என்பது இப்போது உறுதியாகிவிட்டது. ஆகவே அவரை முன்னிலைப்படுத்திய வேகமான மக்கள் மயமாக்கல் நகர்வுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கவுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இந்த மத்தியகுழுக் கூட்டத்தில் கலந்துடையாடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பயணம்
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாரை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது என்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பாரிய நெருக்கடிகள் நிலவுவதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்வரிசை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்து செயற்படுவதை போலவே இரண்டாம் நிலை உறுப்பினர்களும் இளம் உறுப்பினர்களும் நவீன் திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.