பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் என்று எவரும் இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவிற்கு பேஸ்புக் மக்கள் மத்தியில் கலந்துள்ளது. அந்தவகையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், அண்மையில் பேஸ்புக் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறைகளை தூண்டும், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி பேஸ்புக் கணக்குகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 3.4 மில்லியன் தவறான புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.