மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பிரதான சந்தேக நபராக கருதி கைது செய்யப்படுவதற்கு தேடப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரிலேயே உள்ளதாக சிங்கப்பூர் பொலி ஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் சிங்கப்பூர் பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார்.
இந் நிலையில் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப் பூரில் இருந்தால், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பிரகாரம் செயற்படக் கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவு சிங்கப் பூர் பொலிஸாருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் சிவப்பு அறிவித்தல் பிரகாரம் அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்பட்டால் அவரை இலங்கைக்கு அழைத்துவர உள்ளக மட்டத்தில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தெரிவித்தார்.
ஞானசார தேரர் குற்றவாளி ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பு: ஜூன் 14 ஆம் திகதி தண்டனை
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என்று நேற்று ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது.
இது தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு நேற்று ஹோமாகம நீதிவான் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, ஞானசார தேரரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
இந் நிலையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின் கைவிரல் ரேகையை நேற்றைய தினமே பெற்றுக்கொள்ள உத்தரவிட்ட நீதிவான் தண்டனையை எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற எக்னெலிகொட கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் வைத்து எக்னெலிகொடவின் மனைவி சந்யாவை திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் இந்த வழக்கு, தண்டனை சட்டக் கோவையின் 386 மற்றும் 486 ஆம் அத்தியாயங்களுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் வழக்கு விசாரணைகளில் ஞானசார தேரருக்கு எதிரான இரு குற்றச்சட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தே நீதிவான் ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்தார்.