கண்டியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட இருவரும் பிரபல பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த மாகந்துர மதூஸ் என்பவரின் கையாட்கள் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
கண்டி, மடவளை என்ற இடத்தில் விசேட அதிரடிப்படைக்கும் பாதாள உலகக் கேஷ்டிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் இருவர் மரணமடைந்துள்ளனர்.
வத்தேகம பொலிஸ் பிரிவிலுள்ள மடவளை தெல்தெனிய வீதியில் சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இச்சமபவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்துக்குரிய சொகுசு வாகனத்தை பின் தொடர்ந்து வந்து, பின்னர் மடவளையில் அதனை முற்றுகையிட்டுள்ளனர்.
மடவளை, பிரதான சந்தியைக் கடந்து 150 மீற்றர் தூரத்திலுள்ள சன நடமாட்டம் குறைந்த இடத்தில் வாகனத்தில் வந்தவர்களை கைது செய்வதற்காக குறித்த சொகுசு வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
அப்போது வாகனத்திலிருந்த இரு சந்தேக நபர்களும் பொலிசாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்த போது பொலிசார் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
இதன் காரணமாக சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலகக் கேஷ்டியைச் சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் கட்டுகாஸ்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் விசாரணைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரும் பிரபல பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த மாகந்துர மதூஸ் என்பவரின் கையாட்கள் எனப் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் இரண்டு கைத்துப்பாகிள் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. இவை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ரக கைத்துப்பாக்கிகள் என பொலிசார் தெரிவித்தனர்.
வத்தேகம பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.