லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டன் வந்த விமானத்தில் 14 வயது சிறுமி பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
நார்வே நாட்டு விமானம் ஒன்று கடந்த 7ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டன் வந்துள்ளது.
இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட 30 வயது நபர் ஒருவர் தமது 14 வயது மகளை பலாத்கரம் செய்ததாக, குறித்த சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் குடும்பத்தினருடன் விமான ஊழியர்கள் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட நபர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கழிவறைக்கு அனுப்பி வைத்ததாகவும், பின்னர் அவரும் கழிவறைக்கு சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்தபோது விமானத்தில் எஞ்சிய பயணிகளும் சிறுமியின் பெற்றோர்களும் நல்ல தூக்கத்தில் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே தூக்கத்தில் இருந்து கண்விழித்த சிறுமியின் தந்தை, மாயமான சிறுமியை விமானத்தில் தேடியுள்ளார்.
அப்போது குறித்த நபர் விமானத்தின் கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதே வேளையில் கழிவறையின் கதவும் சட்டென்று மூடியுள்ளது. இதில் சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை துரிதமாக செயல்பட்டு கழிவறையை திறக்க முயற்சித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியும் அந்த நபரும் கழிவறைக்குள் சுமார் 20 நிமிடங்கள் செலவிட்டுள்ளதாக அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அந்த நபர் மீது சிறுமியின் தந்தை தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவம் விமான பயணிகளையும் ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து விமானியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு, லண்டனில் விமானம் தரையிறங்கியதும் குறித்த நபரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.