சீமானும், வைகோவும் தமிழர்கள் இல்லையாம்..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழர்கள் அல்ல எனவும் ; அவர்கள் தமிழை வைத்து பிழைப்பு நடத்துவதாகவும் விமர்சித்துள்ளார் அதிமுகவைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு போராட்டங்களுக்கு நாம் தமிழர், மதிமுக, மக்கள் அதிகாரம் போன்ற கட்சிகள் மற்றும் இயக்கங்களே காரணம் எனவும், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ வேண்டுமேயானால் அரசு உடனடியாக சீமான் மற்றும் வைகோவை கைது செய்ய வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா. மேலும், சீமானும், வைகோவும் அரை நக்ஸல்கள் எனவும் காட்டமாக விமர்சித்திருந்தார் ஹெச்.ராஜா.

இந்த நிலையில், நேற்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக நிர்வாகி பாலசுப்ரமணியன், “சீமானும், வைகோவும் பிறப்பால் தமிழர்களே அல்ல, அவர்கள் வேற்று இனத்தவர்கள் – மதத்தவர்கள். தமிழ், தமிழர் என பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திவருகிறார்” என விமர்சித்து பேசினார்.

பாலசுப்ரமணியனின் இந்த கருத்துக்கு தமிழ் ஆர்வலர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.