ஒரு கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை : சிசிடிவி காட்சிகள் என்ன ஆனது?

குடும்பத்துடன் லண்டன் சென்றுவிட்டு வீடு திரும்பிய டாக்டரின் வீட்டில் 1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் கவுசிக். இவர் கடந்த 18-ம் தேதி குடும்பத்துடன் லண்டன் சென்று விட்டார். இன்று காலை சென்னை திரும்பிய இவர், தனது வீட்டு பூஜை அறையில் உள்ள லாக்கரை திறந்து பார்த்துள்ளார். அப்போது லாக்கரில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

என்ன நடந்து என்பதை அறிய அவர் சிசிடிவி கேமராவின் காட்சியை சோதித்து பார்த்துள்ளார். ஆனால் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் இயக்கம் 20ம் தேதி காலை 11 மணியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் மருத்துவர் கவுசிக் புகார் அளித்துள்ளார். நிகழ்விடத்துக்கு வந்த நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி உள்ளிட்ட காவல்துறையினர்‌ கவுசிக் வீட்டுப் பணியாளர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுசிக் ஊருக்குச் சென்ற நேரத்தில் அவரது வீட்டில் பணியாளர்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.