ஆதிவாசியில் யார் அழகி ? கலகலப்பான அழகிப் போட்டி

ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா பழங்குடி ராணி போட்டி நடைப்பெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பழங்குடி இன பெண்கள் கலந்து கொண்டு ஆதி ராணி 2018 போட்டியில் கலந்து கொண்டனர். பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உலகிற்கு தெரிவிக்கும் வண்ணம் இது நடத்தப்பட்டதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்தப்போட்டியானது அம்மாநில சுற்றுலா துறையால் நடத்தப்பட்டது. இறுதிப்போட்டில் சுமார் 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த பல்லவி துரா ( Pallavi Durua)  என்ற பெண்  ‘ஆதி ராணி 2018’ மகுடம் சூடினார்.

இதுகுறித்து பேசிய விருது குழுவின் தலைமைச் செயலாளர் சிதத்மிகா கூறுகையில், நாங்கள் இன்று வரலாற்றை உருவாக்கியுள்ளோம். தேசிய அளவில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நமது நாட்டின் பழங்குடியினர் கலாசாரங்களை சிறப்பித்துக் காட்டியுள்ளோம். ராணி அல்லது அழகி என்ற பட்டமானது வெறும் அழகை வைத்து வழங்கப்படவில்லை. நாங்கள் அவர்களிடம் உரையாடுவோம், அவர்களது பாரம்பரிய கலையை செய்து காட்டச் சொல்வோம்.அதன் மூலம் அவர்களுக்கு தனி அடையாளத்தை வழங்குவோம் என்றார்.

இறுதிச்சுற்றில் பெண்கள் தங்களது பாரம்பரிய உடையை அணிந்து ரேம்ப் வாக் செய்தனர்.அதனைத்தொடர்ந்து வினா – விடை சுற்றும் நடைப்பெற்றது. இந்தப்போட்டியில் பெண்கள் நடிப்பு, இசை, நடனம் ஆகியவற்றின் மூலம் தங்களது திறமைகளை காட்டினர்.

இந்தப்போட்டியில் மகுடம் சூடிய பல்லவி  பேசுகையில், என்னைப்போன்ற பல பழங்குடியின பெண்கள் வெளியில் செல்வதற்கும், கல்வி கற்பதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப்பட்டத்தை வென்றதன் மூலம் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக நான் இருப்பேன் என நம்புகிறேன் என்றார்.