நல்லாட்சி அரசாங்கத்தின் செயல்திறன் மீதான அதிருப்தியிலேயே சிலர் சர்வாதிகாரி ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற கருத்தினை முன் வைத்துள்ளனர்.
ஆனால் ஜனநாயக சூழலில் கோத்தபாயவிடம் ஆட்சி செல்வது எந்தளவு பாரதூரமானது என்பதை அறியாதவர்களாக உள்ளனர். கோத்தபாய தனது ஆதிக்கத்தை செலுத்த அடக்குமுறையை கையாள்வார் என பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ களமிறங்குவார் என பலரால் எதிர்வு கூறப்படுகின்றது.
இதே நிலையில் ஹிட்லர் போன்ற இறுக்கமான தன்மையிலான ஆட்சி அமைந்தாலும் பரவாயில்லை என்ற கருத்துக்கள் தேரர்கள் உள்ளிட்ட ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டார்.
அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
ஹிட்லர் போன்ற ஒரு ஆட்சி அமைந்தாலும் பரவாயில்லை என அஸ்கிரிய அனுநாயக தேரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறிய கருத்துடன் இணங்கும் சிந்தனை கொழும்பில் ஒரு சிலரிடம் உள்ளது.
காரணம் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து எதனையும் சீராக செய்யவில்லை. ஆனால் ஒரு சர்வாதிகாரியின் கையில் ஆட்சி முறைமை இருந்தால் அவர் அவற்றை சரியாக செய்விப்பார் என்ற ஒரு எண்ணம் உள்ளது. குறிப்பாக கோத்தாபய ராஜபக் ஷ கொழும்பு நகரை சுத்தமாக வைத்திருந்தார், சீர்திருத்தினார் என்ற கருத்துக்களை கூறுகின்றனர்.
அவ்வாறான ஒருவரின் கையில் ஆட்சியை கொடுத்தால் இராணுவத்தின் உதவியுடன் ஒரு கட்டுப்பாட்டுடன் செய்வார் என்ற எண்ணம் சிலர் மனதில் உள்ளது.
அதன் வெளிப்பாடாக தான் அந்த அனுநாயக தேரர் உள்ளிட்ட ஒரு சிலரின் கருத்துக்களை நாம் பார்க்கின்றோம். ஆனால் இவர்கள் முன்வைத்த கருத்துக்கள் எந்தளவு பாரதூரமானவை என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
ஒரு ஜனநாயக சூழலில் அவ்வாறான ஒரு முறைமைக்கு செல்வது நாட்டுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் கோத்தபாய ராஜபக் ஷ தாம் வினைத்திறனாக செய்ய வேண்டும் என்பதற்காக கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்று அடக்குமுறை மூலமாக தமது இலக்கை அடையவே முயற்சிப்பார்.
அடக்குமுறை என்பது ஜனநாயகத்துக்கு நேர் எதிரான ஒன்றாகும். ஆகவே, அதனை மறந்து சிலர் உடனடியாக அபிவிருத்திகளை செய்ய முடியும், நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என்ற கருத்துக்களை கூறிக்கொண்டுள்ளனர்.
எனினும் எமது நாட்டில் அவ்வாறான ஒரு சிந்தனைக்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என நினைக்கின்றோம். இப்போதுள்ள சூழலில் இன்று அவ்வாறான ஒரு சிந்தனை உள்ளது.
மேல் மட்டத்தில் அவ்வாறான சிந்தனைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான சிங்கள மக்களும் கோத்தபாய ராஜபக் ஷ என்ற சர்வாதிகார தலைவரை ஆதரிக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
அதேபோல் பொது எதிரணி தமது வேட்பாளர் குறித்து சிந்திக்கும் போது வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் என்ற அடிப்படையில் சிந்தித்தால் கோத் தபாய ராஜபக் ஷவை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.
அதேபோல் அனுநாயக தேரரின் கருத்து கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல் எதிர்பார்ப்புக்கு பாரிய இடியாக வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.