நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், “போலி பிரசாரங்கள் ஊடாக முழு பாடசாலை கட்டமைப்புக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது. ஊழல் மோசடி, விரயம், திருட்டு போன்ற செயற்பாடுகளில் இருந்து கல்வித்துறை மீட்கப்பட்டுள்ளது.
நியமனங்களும் கல்வி உயர்வுகளும் அரசியல் பேதங்கள் இன்றி வழங்கப்படுகின்றன. தொழிற்சங்கங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாது.இந்நிலையில், நாளை மறுதினம் பாடசாலை மூடப்பட போவதாக வெளியாகும் தகவல்களால் 42 இலட்சம் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, தனிநபர்களின் அரசியல் தேவைகளுக்காக கல்வியுடன் விளையாடுவதை தவிர்க்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.