கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ள காரணத்தால் இதுவரை வெள்ளத்தில் சிக்கி 75 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளத்தில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் கேரள மாநிலத்திற்கு நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கூறுகையில், கேரளாவில் 12 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
1924ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மோசமான வெள்ளம் இதுவாகும். பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் அளவு இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ப்ரித்விராஜின் வீடு கொச்சியில் உள்ளது. கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. ப்ரித்விராஜின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. அவர் வீடு வெள்ளத்தில் மூழ்கிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
ப்ரித்விராஜின் அம்மாவும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். அவரை பெரிய பாத்திரத்தில் அமர வைத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்துள்ளனர்.
அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.