தனக்கு கிடைத்த நன்கொடையில் ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாக, மீன் விற்று படிக்கும் கேரள மாணவி ஹனன் ஹமீது கூறியுள்ளார்.
கேரளாவில் கல்லூரியில் பயிலும் மாணவி ஹனன், குடும்ப வறுமை காரணமாக மீன் விற்றுக் கொண்டு தனது படிப்பையு தொடர்கிறார். இவர் குறித்த கட்டுரை மலையாள நாளிதழ் ஒன்றில் வெளியானது. வறுமையை எதிர்த்துப் போராடி குடும்பத்தை காப்பாற்றும் அந்த மாணவியை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். திரைப்பட இயக்குநர்கள் சிலர் அவருக்கு வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹனன், சுய விளம்பரத்துக்காக இப்படி செய்கிறார் என்று அவரை கடுமையாக சிலர் விமர்சித்தனர். இந்த விவகாரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கவனத்துக்குச் சென்றது. அவர், ஹனனின் மன உறுதியை பாராட்டி கேரள அரசின் மகள் என்று பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் ஹனனை தரக்குறைவாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஹனனுக்கு பலர் ஆதரவு தெரிவித்ததோடு, கு பண உதவியும் செய்தனர். இந்நிலையில் வரலாறு காணாத கனமழை. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, அம்மாநிலம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இதையடுத்து கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், தனிப்பட்ட நபர்களும் உதவி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு கிடைத்த நன்கொடை தொகையில் ரூ.1.5 லட்சத்தை கேரள முதல்வா் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார் மாணவி ஹனன்.
மக்களில் சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்களிடம் பெற்ற நன்கொடையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரூ.1.5 லட்சத்தை திருப்பி அளிக்கிறேன். உடனடியாக நிவாரண நிதிக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்ய, எனது ஃபோன் வேலை செய்யவில்லை. வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. அதனால் இன்னும் ஓரிரு நாளில் அந்தப் பணத்தை அனுப்பிவிடுவேன் என்று ஹன்ன் தெரிவித்துள்ளார்.