பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்து ,திடீரென மயங்கிவிழுந்து மோசமான நிலைக்குச் சென்றுவிட்டார் என்றும், உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அடுத்த சில மணி நேரத்தில் சுயநினைவு திரும்பி கண்விழித்துப் பார்த்ததாகவும் தகவல் வதந்தியாக வேகமாகப் பரவியது.
இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த 6 மாதங்களாக சசிகலா, உடலில் சர்க்கரையின் அளவை மிகச் சரியாகப் பராமரித்துவருகிறார். தற்போது, கர்நாடகாவில் காலை நேரத்தில் அதிகமான குளிர் இருப்பதால், நடைப்பயிற்சியைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக யோகா மட்டுமே செய்துவருகிறார். ஆனாலும், உடலில் சர்க்கரையின் அளவு சரியாகவே உள்ளது. சிறைக்கு வந்த புதிதில் சிறை உணவு பயன்படுத்தாமல் சிரமப்பட்டுவந்தார். அப்போதெல்லாம் பிரெட் அதிகமாக எடுத்துக்கொண்டார். ஆனால், தற்போது அப்படி இல்லை. சிறை உணவை பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டார். நலமுடனே இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர்.
சசிகலா உடல்நிலை குறித்து பரப்பன அக்ரஹாரா சிறை துணைக் கண்காணிப்பாளர் மரியகவுடாவிடம் விசாரித்தபோது, ‘சசிகலா நலமுடன் இருக்கிறார். இன்றுகூட 45 நிமிடம் வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தினார்’ எனத் தெரிவித்தார்.