நிதி நிறுவன கொள்ளை: பெண் பணியாளரும் காதலனும் திட்டமிட்ட நாடகமா?

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரிகள் என, நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் நேற்று கைதாகியுள்ளனர்.

குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 19 ஆம் திகதி காலை சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டிருந்தது.

வழமை போன்று காலை நிதி நிறுவன பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக தயாரான நிலையில் அங்கு கத்தியுடன் உள்நுழைந்த இருவர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றனர்.

இந்நிலையில் உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் குறித்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அவரது காதலன் என அறியப்படும் இளைஞன் மற்றுமொருவரும் பொலிஸாரினால் கைதாகியுள்ளனர்.

கொட்டாஞ்சேனையை சேர்ந்த யுவதியே கைதாகியுள்ளார். அவரது காதலரான சுன்னாகத்தை சேர்ந்த வாலிபரும், அவரது நண்பருமே கைதாகியுள்ளனர்.