பிள்ளைகள் இருந்தும் யாருமற்ற அநாதையாக உயிரை விட்ட மூதாட்டி…..

நீண்டகாலமாகத் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் அழுகிய நிலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். கைதடியில் நேற்றைய தினம்(10) இடம்பெற்றுள்ளது.

குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் அனைவரும் திருமணம் செய்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் மூதாட்டி கடந்த பல வருடங்களாகத் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக குறித்த மூதாட்டியின் நடமாட்டத்தை அயற்பகுதி மக்கள் அவதானிக்கவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த மூதாட்டியின் மகள் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தனது தாயார் சடலமாகக் காணப்படுவது கண்டு அதியர்ச்சியடைந்துள்ளார்.இதனையடுத்து சாவகச்சேரிப் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது. சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணைகள் மேற்கொண்டனர்.

குறித்த மூதாட்டி இரு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.கைதடி தெற்குப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் இலட்சுமி (வயது-80) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.