தற்போதைய நிலைமை குறித்து ஐ.நா. இராஜதந்திரி!

இலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்டிருந்த யுத்த நிலைமைகள் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட தற்போதுள்ள நிலையினைப் போன்றதொரு மிக மோசமான அரசியலமைப்பு நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கவில்லை என அல்ஜீரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐ.நா. இராஜதந்திரியுமான லக்தர் பிரஹிமி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை அரசியமைப்பிற்கு முரணானது எனும் அடிப்படையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் எதிர்ப்புக்கள் வலுத்துள்ள நிலையில், நெல்சன் மண்டேலாவினால் நிறுவப்பட்ட சமாதானம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் செயற்படும் ‘த எல்டர்ஸ்” அமைப்பினூடாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே பிரஹிமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் முப்பது வருடகால யுத்த நிலைமைகளின் போது கூட தற்போதுள்ள நிலையினைப் போன்றதொரு மோசமான அரசியலமைப்பு நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கவில்லை.

நாட்டின் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைப் பாதுகாப்பதுடன், பாராளுமன்றத்தின் ஜனநாயகத் தன்மையினையும் உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும்.

அத்தோடு அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, நியாயத்துவம் என்பன காணப்பட வேண்டும் என்பதுடன், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.