வவுனியாவில் திருடர்களுக்கு நேர்ந்த கதி!

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று திருடர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்  பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வீடு ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் வீட்டில் திருடிய பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

ஒருவர் மாத்திரம் குறித்த வீட்டில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் வீட்டிற்கு வந்த வீட்டு உரிமையாளர் திருடனைப் பார்த்து கூக்குரலிட்டு அயலவர்களின் உதவியுடன் திருடனைப்பிடித்து திருடனின் கைபேசியின் மூலம் அழைப்பை ஏற்படுத்தி பொருட்களை எடுத்துச் சென்றிருந்த இரண்டு நபர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்களையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருடப்பட்ட முச்சக்கர வண்டியும் வீட்டுப்பொருட்களும் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.