மகிழ்ச்சியின் உச்சத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்!

“மிரட்டல்கள் – நெருக்குதல்கள் – அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர்களை வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தாயக மக்கள் நேற்று பகிரங்கமாக துயிலும் இல்லங்களில் நினைவுகூர்ந்துள்ளார்கள். இது எமக்குத் திருப்தியை – மன நிறைவை அளிக்கின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மாவீரர் நினைவு தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசு அனுமதி வழங்கவில்லை எனப் போலி அரசான மஹிந்த அரசின் தகவல் திணைக்களம் மிரட்டல் அறிக்கை விட்டிருந்தது. அத்துடன், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் கடந்த சில தினங்களாகச் செயற்பட்டனர். மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடைகளை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. எனினும், மிரட்டல்கள் – நெருக்குதல்கள் – அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர்களை வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தாயக மக்கள் நேற்று பகிரங்கமாக துயிலும் இல்லங்களில் நினைவுகூர்ந்துள்ளார்கள். இது எமக்குத் திருப்தியை – மன நிறைவை அளிக்கின்றது.

வடக்கு, கிழக்கு மக்களின் இந்தத் துணிகரத்தை நான் வரவேற்கின்றேன். நேற்று நாடாளுமன்ற அமர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற காரணத்தால் எமது மக்கள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டித்த மாவீரர் நாள் நிகழ்வில் நான் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இதற்கு வருத்தம் தெரிவிக்கின்றேன். எனினும், நான் தனிப்பட்ட முறையில் மாவீரர்களை கொழும்பில் நினைவுகூர்ந்துள்ளேன்” – என்றார்.