பள்ளி சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்ற சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கம்பம் ஜல்லிக்கட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அறிவுநிதி. இவரது மகள் வாரச்சந்தை அருகேயுள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 21 ஆம் தேதி வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தவர் அதிகாலை மாயமானதாக அறிவுநிதி கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கம்பம் அரசு போக்குவரத்துக்கழகம் பணிமனை அருகே மாணவி நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோம்பை ரோட்டைச்சேர்ந்த செந்தில்குமார் மகன் யோகேஸ்வரன் என்பவர் திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசை வார்த்தை கூறி கேரளாவிற்கு அழைத்துச் சென்றதாக மாணவி வாக்குமூலம் அளித்தார்.
வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் யோகேஸ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.