ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக நாகராஜ் நாயுடு என்பவரும் ஆசிரியை புவனேஸ்வரியும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்து உள்ளனர். மேலும் வீட்டு பாடம் எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து வகுப்பு ஆசிரியை 6 மாணவர்களின் ஆடைகளை கழற்றி பள்ளி திடலில் நிர்வாணமாக வெயிலில் சுமார் 2 மணி நேரம் நிற்க வைத்துள்ளார்.
அந்த வழியாக சென்றவர்கள் மாணவர்களை செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த புகைப்படம் ஆந்திரா முழுவதும் பரவியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி பாண்டு ரெங்கசாமி அந்த பள்ளியில் விசாரணை நடத்த மண்டல அலுவலருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மண்டல அலுவலர் லீலா ராணி அந்த பள்ளிக்கு சென்று சம்பவம் நடந்தது உண்மை என மாவட்ட கல்வி அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியர் பிரதிம்னாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புங்கனூர் சென்ற காவல் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் காவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் நாயுடு ஆசிரியை புவனேஸ்வரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பள்ளி முன்பு மாணவர்களின் உறவினர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.