அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்… காப்பாற்றுங்கள்: கண்ணீர் விட்டு கதறும் இளம்பெண்

சொந்த குடும்பத்தாரால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் சவுதியில் இருந்து வெளியேறிய இளம்பெண் ஒருவர் தாய்லாந்து விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இது குடும்ப பிரச்னை என கூறும் தாய்லாந்து அதிகாரிகள், மீண்டும் அவரை சொந்த நாட்டுக்கே திருப்பி எனுப்ப முயற்சி மேற்கொள்வதால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவுக்கெ தம்மை திருப்பி அனுப்பி வைத்தால் தம்மை தமது குடும்பத்தினர் கொலை செய்து விடுவார்கள் எனவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தம்மை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த 18 வயதான ரஹப் முகமது அல்-குனுன் என்பவரே தாய்லாந்து வழியாக அடைக்கலம் கோரி அவுஸ்திரேலியா செல்லும் வழியில் அதிகாரிகளால் பாங்காக் விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

சொந்த குடும்பத்தாரால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக கடும் சித்திரவதைக்கு தொடர்ந்து உள்ளாக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறியுள்ளார் ரஹப் முகமது.

குடும்பத்தாருடன் குவைத் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில், அங்கிருந்து மாயமான ரஹப் தொடர்பில், அவரது உறவினர் புகார் அளித்ததன் அடிப்படையிலேயே தாய்லாந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு பாங்காக் விமான நிலையம் வந்திறங்கிய ரஹாப், அதிகாரிகளால் உடனடியாக சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமது குடும்பத்தாரால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கெஞ்சிய பின்னரும், இது வெறும் குடும்ப பிரச்னை என சுட்டிக்காட்டி அவரை குவைத் நாட்டுக்கு திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கைகளை தாய்லாந்து அரசு மேற்கொண்டு வருகிறது.

ரஹப் முகமதுவின் தந்தையும் சகோதரரும் குவைத் விமான நிலையத்தில் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கூந்தலை பராமரிப்பதற்காக தமது முடியை வெட்டியதால் சொந்த தந்தையால் ஆறு மாத காலம் அறைக்குள் தம்மை பூட்டி வைத்ததாக கூறும் ரஹப்,

சவுதிக்கு தம்மை அழைத்துச் செல்வதே தண்டனை காலம் முடித்து வெளியேறும் நாள் தம்மை கொல்வதற்குதான் என்றார்.

தற்போதைய சூழலில் தாய்லாந்து பொலிசார் தமக்கு உதவ மறுத்துள்ள நிலையில், சவுதி தூதரக அதிகாரிகள் பலரால் அச்சுறுத்தப்பட்டேன் என்றார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டாய திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து சவுதியில் இருந்து வெளியேறிய 24 வயதான தினா அலி லஸ்லூம் என்ற இளம்பெண் சுமார் 13 மணி நேரம் மணிலா விமான நிலையத்தில் அதிகாரிகளால் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து வலுக்கட்டாயமாக அவர் சவுதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார், அதன்பின்னர் இதுவரை அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.