வெளிநாட்டில் இருந்து வந்து பெற்றோரை தேடும் தமிழர்!

40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து பெற்றோரை பிரிந்து டென்மார்க் சென்ற நபர் தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் தமிழகம் திரும்பி வந்துள்ளார்.

கோயம்புத்தூரை சேர்ந்த அய்யாவு – சரஸ்வதி தம்பதியினருக்கு 1975 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜ்குமார் என பெயர் சூட்டினர்.

கருத்து வேறுபாட்டால் சரஸ்வதி பிரிந்துவிட்ட நிலையில், அய்யாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு குழந்தையை வளர்க்க முடியாத காரணத்தால் தனியார் காப்பகத்தில் ராஜ்குமார் ஒப்படைக்கப்பட்டார்.

டென்மார்க்கை சேர்ந்த, கெல்ட் – பெர்த் ஆண்டர்சன் தம்பதியினர் 3 வயதான ராஜ்குமாரை முறைப்படி, தத்து எடுத்தனர்.

டென்மார்க் சென்றவுடன் ராஜ்குமாரின் பெயர் ஆண்டர்சன் என மாற்றப்பட்டது. தற்போது அவருக்கு வயது 43. டென்மார்க்கில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனராக ஆண்டர்சன் பணியாற்றுகிறார்.

தன்னை பெற்றெடுத்த பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்த காரணத்தால் 2015 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் வந்துள்ளார். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக வந்துள்ளார் ஆண்டர்சன்.

பெற்றோர், உறவினர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. மூதாட்டி ஒருவர், எனக்கு தங்கை உள்ளதாக தெரிவித்தார். இது, மிகவும் மகிழ்ச்சியை தந்தது, எனது பெற்றோரை சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளார்.