ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க டோனிக்கு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது.
மகேந்திர சிங் டோனி இந்த ஆண்டை அட்டகாசமாகத் தொடங்கியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் டோனி அடுத்தடுத்து மூன்று அரைசதங்களை விளாசினார்.
கடந்தாண்டு தோனியின் பேட்டிங்கிற்கும் தற்போதைய ஆட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகிறது.
2018-ல் 20 போட்டிகளில் விளையாடி 275 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரால் முன்பு போல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.
அவுஸ்திரேலிய தொடரில் இரண்டு போட்டிகளில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று போட்டியை தித்திப்பாக முடித்து வைத்த டோனி தன் மீதான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் இந்தியா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்து தொடரில் டோனி இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கிரிக்கெட்டில் அடுத்த மைல்கல்லை எட்டுவார். நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் 652 ரன்கள் (18 போட்டிகள்), சேவாக் 598 ரன்கள் (12 போட்டிகள்) இவர்களுக்கு அடுத்தபடியாக டோனி 456 ரன்கள் (10 போட்டிகள்) எடுத்துள்ளார்.
இந்தத்தொடரில் டோனி இன்னும் 197 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பார்.