யாழ் நகருக்கு புதிய ரயிலில் வந்த அமைச்சர் அர்ஜூன….!!

வடக்கில் நிலவிவரும் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சனை ஆகியவற்றைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ ஊழியர்களை சந்தித்தார். வடக்கில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். வடக்கு மற்றும் தென்பகுதி மக்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய முறையொன்றை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் வடக்கின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.மேலும், உயர்தரத்துடன் கூடிய தொடருந்து மற்றும் பேருந்துச் சேவைகளை வடமாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட புதிய உத்தரதேவி தொடருந்துப் பயணத்தின் போது அறிவியல் நகர் உப தொடருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.இதுதொடர்பான நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். இந்த தொடருந்து நிலையத்தை அமைப்பதற்காக 20 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் தேசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.