தமிழிசையை உருவ கேலி செய்த பிரபல ஊடகம்!

பாஜக தலைவர் தமிழிசையை ஊடகம் ஒன்று உருவ கேலி செய்து கார்ட்டூன் வரைந்திருக்கிறது. தமிழிசையின் அரசியலில் மாற்றுக் கருத்து இருந்தால் அதை விமர்சிக்கலாம். ஆனால் அவர் தலைமுடி, நிறம் போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மிகவும் தவறான ஒரு விஷயமாகும் என பாஜகவினர் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து முன்னணி பத்திரிகைக்கு பேட்டியளித்த தமிழிசை,தன்னை கேலி செய்து வெளியிட்ட கார்ட்டூன் வரைபடம் தன் கட்சி சார்ந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் அதிருப்தி அளித்ததாக தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும், நிறம் அதிகமாக இருக்கிற பெண்களை இந்தச் சமுதாயம் இப்படிக் கேலி செய்வதில்லை. நான் ஒரு ஒழுக்கமான பெண்ணாக இருந்தாலும், டாக்டராக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், இவர்கள் என் நிறத்தையும் உருவ அமைப்பையும்தான் கவனிக்கிறார்கள். இதன் பெயர் வக்கிரம். மேலும் இதுகுறித்து அவர் குழந்தைகள் கேள்வி கேட்பதாகவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அரசியலில் பலம் பொருந்திய பின்னணியில் இருந்து வந்த தனக்கே இந்த நிலைமை என்றால் புதிதாக உள்நுழையும் பெண்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.