ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஆதர்ஷ் மீது அவருடன் பணியாற்றிய நர்ஸ் ஆசிட் வீச முயன்றதோடு மட்டுமல்லாமல் அவருடம் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மனைவியைப் பிரிந்து வாழும் டாக்டர் ஆதர்ஷ் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் அருணகுமாரிக்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அருணாகுமாரியின் கணவர் உயிரிழந்த நிலையில், ஒரு கட்டத்தில் அருணாகுமாரியுடனான நட்பை ஆதர்ஷ் முறித்துக் கொண்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அருணாகுமாரி, ஆதர்ஷை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், விவாகரத்து வழக்கில் ஆஜராக திருப்பதி நீதிமன்றத்திற்கு டாக்டர் ஆதர்ஷ் வந்தார்.
அப்போது, அங்கு காத்திருந்த அருணாகுமாரி, தனது முகத்தை கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு ஆதர்ஷ் மீது ஆசிட் வீசினார்.
ஆசிட் வீச்சீலிருந்து ஆதர்ஷ் அதிர்ஷ்டவசமாக தப்பிய போதிலும், அருகில் இருந்தவர்களின் கை, கால்களில் ஆசிட் பட்டதால், பரபரப்பு நிலவியது. அப்போது கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்த அருணாகுமாரி தற்கொலைக்கு முயன்றார். அவரை சுற்றிவளைத்துப் பிடித்த பொலிசார் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் நீதிமன்றத்தில் இருந்த இருவர் மீது அருணாகுமாரி வீசிய ஆசிட் பட்டதால் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருப்பதி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.